Friday, September 4, 2015


காரீயம்
செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. 

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 

நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு, இவை வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 

 முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்சுக்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்து, தடை செய்யப்பட்டது.

கரும்பு ஒரு கசப்பான வரலாறு
இன்று உலகம் முழுக்கவே கரும்பு பெரும் விவசாய விளைபொருளாக இருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாறு தந்த ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதி, ‘தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்தார். சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டிலேயே கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறையை தெரிந்து வைத்திருந்தார்கள். கி.மு.100-ம் ஆண்டில் இந்த முறை சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்தது தான். கி.பி. 636-ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கசப்பான கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் பெருமளவு உருவாவதற்கு கரும்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் அப்போது இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் மிக தேவைப்பட்டார்கள். ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக அடிமைகளை பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கினார்கள். அந்த அடிமைகள் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டார்கள். தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18-ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இப்படி அடிமைகள் பெருமளவு உருவாவதற்கு கரும்பு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனிக்கும் கரும்பிற்குப் பின்னால் இருக்கும் இந்த கசப்பான வரலாறு இன்றைய தலைமுறை அறியாதது.

Tuesday, July 28, 2015


சென்னையில் ஓடிய ஆறுகள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று சென்னையை இரண்டாகப் பிரிக்கும் கூவம் ஆறு. மற்றொன்று தென் சென்னையில் ஓடும் அடையாறு. இந்த அடையாற்றின் கரையில் தான் முதல் கர்நாடகப் போர் நடைபெற்றது. 

கூவம் ஆறு, செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட 32 கி.மீ. துரத்திற்கு ஒரு வாய்கால் போல ஓடி வரும் கூவம். அதன்பின் அகன்ற ஆறாக ஓடி வருகிறது. காடுவெட்டி உள்ள திருவேற்காட்டில் இதை பழம்பாலாறு என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்ட நதி இது என்றால் இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். கூவம் ஆறு கோயம்பேடு பகுதியில் சென்னைக்குள் நுழைந்து சேப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட்ட சமயத்தில் சுத்தமான நீர் இந்த கூவத்தில் ஓடியது. மக்கள் இதில் குளித்து இருக்கிறார்கள். கோமலீஸ்வரன் பேட்டை அருகே இது வடக்கு நோக்கி பாய்கிறது. இப்படி வடக்கு நோக்கி பாய்வதை உத்தரவானி என்று அழைக்கிறார்கள். வடக்கு நோக்கிப் பாயும் நதியை புண்ணிய நதி என்பார்கள். அந்த வகையில் கூவமும் புண்ணிய நதியாக இருந்தது. இப்படி சிறந்து விளங்கிய கூவம் ஆறு, இன்று கழிவு நீர் நிறைந்து ஓடும் சாக்கடையாக மாறி இருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் கூவம் நதியின் குறுக்கே 10 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

கூவத்தின் மொத்த நீளம் 48 கி.மீ. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்து ஏரிகள் நிரம்பும் பொழுது கூவத்தில் அதிகமாக நீர் பாயும். கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வருகிறது. கூவம் போலவே சென்னையில் ஓடும் மற்றொரு ஆறு அடையாறு. இது காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, எரித்தாங்களில் உற்பத்தியாகிறது. இது அனகாபுத்தூர் வழியாக ஓடி ஈக்காட்டுத்தாங்கல் அருகே சென்னைக்குள் நுழைகிறது. அதன்பின் சைதாபேட்டை, கிண்டி வழியாக சென்று அடையாறு அருகே கடலில் கலக்கிறது. சென்னை நகரில் அடையாறு மீது 4 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆறிலும் ஒரு காலத்தில் சுத்தமான நீரே ஓடியது. மக்களுக்கும் பயன்பட்டது. 

இன்றைக்கும் கூட அடையாறு சென்னைக்குள் நுழையும் வரை சுத்தமான நீராகவே இருக்கிறது. சென்னையில் நுழைந்தவுடன் அதில் சாக்காடை நீர் கலந்து விடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளும் சென்னைவாசிகளை பிராணயாமம் செய்ய வைக்கிறது. இந்த ஆறுகளை அழகுபடுத்த அவ்வப்போது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிவதுதான் வேதனை.

Monday, July 27, 2015


பட்டு பிறந்த வரலாறு
பட்டு சேலைக்கு மயங்காத பெண்களே இல்லை எனலாம். காஞ்சிப் பட்டு, பனாரஸ் பட்டு, பெல்ஜியம் பட்டு என்று ஏகப்பட்ட பட்டு சேலைகள் மங்கையரின் கனவுகளில் தொந்தரவு செய்கின்றன. இந்த பட்டு பிறந்த கதை மிக சுவாரசியமானது. 

 சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் பட்டு உற்பத்தி செய்ய கற்று இருந்தனர். சீன நாட்டு அரசி ஷீலிங்ஷீ ஒரு நாள் கை கழுவும் போது, நீர்த் தொட்டியின் அருகில் இருந்த செடியில் பட்டுப் புழுக்கூடு தொங்குவதை பார்த்தாள். 

உடனே அதை எடுத்து தொட்டியில் போட்டு வைத்தாள். மறுநாள் காலை அந்த தொட்டியை பார்த்த போது, அதில் இருந்த நீரில் மெல்லிய நூலிழைகள் இருப்பதைக் பார்த்தாள். நூலின் ஒரு முனையை பிடித்து இழுத்த போது, அது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்த நூலைக் கொண்டு ஆடைகளைத் தயாரிக்கலாம் என்று அரசி கூறினாள். 

இதையடுத்து பட்டுத் துணியின் மவுசு, வண்ணத்துப் பூச்சியாக சிறகடித்து உலகம் முழுவதும் பறந்தது. பல நூற்றாண்டுகள் வரை சீனர்கள் பட்டுத் தயாரிப்பை படுரகசியமாக வைத்திருந்தனர். இந்தப் பட்டுத் துணியை வாங்குவதற்காக பல நாட்டினரும் சீனாவுக்கு சென்றனர். இறுதியில் மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானியர்களுக்கு பட்டின் ரகசியம் பிடிபட்டது. அவர்களும் வெகு நாட்கள் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். 

கி.பி.550-ல் பைஸண்டிய நாட்டின் அரசன் ஜஸ்டினியன் பட்டு ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக, தனது ஒற்றர்கள் இருவரை மதகுருமார்கள் வேடத்தில் சீனாவிற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் மூங்கில் குழாயினுள் பட்டுப் புழு முட்டைகளை சேகரித்து ரகசியமாக சீனாவில் இருந்து கொண்டு வந்தனர். அதன் பின்பு பட்டுப்புழு வளர்ப்பு பெருகி, பட்டுநூல் உற்பத்தி செய்யும் கலை உலகெங்கும் பரவியது. 

தற்போது சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா, இத்தாலி ஆகிய நாடுகள் பட்டு உற்பத்திக்காக பட்டுப் புழுவை வளர்க்கின்றன. பெண் பட்டுப் பூச்சி, முசுக் கொட்டை செடியின் இலைகளில் 500 முட்டைகளை இடும். 10 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். நோயுள்ள புழுக்களை எடுத்துவிட்டு ஆரோக்கியமான புழுக்களை வளர்க்கின்றனர். 

 இந்தப் பட்டுப் புழுக்களின் வாயின் அடியிலுள்ள துவாரம் வழியாக வரும் இழையே பட்டு. 25 நாட்களில் பட்டுப் புழு வளர்ச்சியடைந்தால் அதற்கு இறக்கை முளைத்து கூட்டைப் பிளந்து கொண்டு வண்ணத்துப் பூச்சியாகப் பறந்துவிடும். இப்படி பூச்சி வெளிவந்து விட்டால் நூல் ஒரே இழையாக நூற்க பயனற்றதாக ஆகிவிடும். அதானால்தான், பூச்சி வெளிவரும் முன்பே அதை வெந்நீரில் போட்டுக் கொன்றுவிடுகிறார்கள். 

ஒரு பட்டுப் புழுவில் இருந்து, அதன் எடையில் ஐந்தில் ஒரு பங்கு பட்டு கிடைக்கும். இந்த பட்டு 500 முதல் 1300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பட்டு நூல் அதே கனம் கொண்ட உருக்குக் கம்பி போல் உறுதியானது. அழகையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் வைத்து பார்த்தால் உலகிலேயே மிகவும் தரமான மேன்மையான பட்டு இத்தாலிய நாட்டுப் பட்டுதான்.

Saturday, July 25, 2015

ஆசியாவின் முதல் தேசிய பூங்கா

நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் பலரை உருவாக்கும் பயிற்சி மையங்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளன. இந்த மாநிலம் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. இங்கு தான், இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் பூங்கா உள்ளது. இது 1936-ல் தொடங்கப்பட்டது. அப்போது இந்த பூங்காவின் பெயர் ஹெய்லி தேசிய பூங்கா. இங்கு தான் முதன்முதலில் புலிகளை பாதுகாக்கும் மையம் தொடங்கப்பட்டது. அரிய வகை விலங்கினமான பெங்கால் டைகர்ஸ் என்று சொல்லப்படும் வங்காளப் புலிகள் இந்த பூங்காவில் மட்டுமே அதிக அளவு காணப்படுகின்றன. இந்த பூங்கா 201 மைல் பரப்பளவு கொண்டது. இதில் 73 சதவீதம் வனப்பகுதியாகும். 10 சதவீதம் பசும்புல் தரையை கொண்டது. இங்கு மரங்களில் வாழும் 110 உயிரினங்களும், 50 வகையான பாலூட்டிகளும், 580 வகையான பறவை இனங்களும், 25 அரியவகை உயிரினங்களும் உள்ளன. இந்த பூங்கா உருவாக்கப்படுவதற்கு முன்பு இந்த பகுதி தெஹ்ரி கார்வால் என்ற மன்னரின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. போக்சாஸ் என்ற பழங்குடி மக்கள் இந்த பகுதியில் குடியேறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். ஆனால் 1860-களில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது இவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வனப்பகுதியை பாதுகாப்பதில் பெரும் முயற்சி எடுத்தவர் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரி மேஜர் ரம்சே ஆவார். அவர் தான் முதன் முதலில் இந்த வனப்பகுதியை பாதுகாக்க, 1868-ல் வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதியை கொண்டு வந்தார். பின்னர் 1879-ல் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1900-ல் இந்த வனப்பகுதியில் ஒரு தேசிய பூங்கா உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் நிர்வாகம் 1907-ல் தனது முயற்சியை தொடங்கியது. 1930-ல் இந்த பகுதி பிரிட்டிஷ் அலுவலர் ஜிம்கார்பெட் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதைய கவர்னர் மால்கம் ஹெய்லி பெயரில் 125 மைல் பரப்பளவில் தேசிய பூங்காவாக 1936-ல் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் முதல் தேசிய பூங்காவும் இது தான். இந்த வனப்பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, வீட்டு உபயோகத்துக்கான மரங்கள் வெட்டுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 2-ம் உலகப்போரின் போது இந்த பூங்காவில் விலங்குகளை வேட்டையாடி, கடத்தி செல்வதும், அளவுக்கதிகமாக மரங்கள் வெட்டுவதும் நிகழ்ந்தது. பின்னர் இந்த பூங்கா 1955-ல் ராம்கங்கா தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறுபடியும் 1956-ல் கார்பெட் தேசிய பூங்காவாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த பெயர் பூங்காவை உருவாக்கிய ஜிம் கார்பெட் நினைவாக வைக்கப்பட்டது. வங்கப்புலிகள் தான் இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். அதற்கு அடுத்த இடத்தை யானைகள் பிடித்துள்ளன. இவை இரண்டும் அதிக அளவில் காணப்படுவது இந்தியாவில் இந்த ஜிம் கார்பெட் பூங்காவில் மட்டுமே. 1993- முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்ற காலாமாகும். இங்கு ஜீப், டிரக் ஆகியவற்றில் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் ஒரே அவசர எண்
எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கணினி மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை. அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 1800180551 என்று அனைத்திற்கும் ஒரு எண் உண்டு. இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது. இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது வெகு சுலபமாக உள்ளது. அங்கு ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண்கள் தான் 911, 112. இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்திற்கோ சென்றடையும் படி அமைத்திருக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் 911, 112 என்ற எண்களை டயல் செய்தால் தானாக அவசர எண் 100க்கு சென்று சேருவது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால்கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள். செல்போன்களில் பேசினால் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட் லாக் ஆகியிருந்தால் கூட 1, 2, 9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, சிம் கார்டே இல்லாமல் இருந்தாலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்யமுடியும். எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.