Wednesday, April 20, 2016


செல்போன்கள்  உடல் நலத்துக்கு  கேடா? 18/04/2016

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் மிகமுக்கியமான ஒரு இடத்தில் இருப்பது செல்போன்கள்தான். எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல், எல்லோருடைய கைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடம்பர சாதனமாக இருந்த செல்போன், இப்போது இது இல்லாமல் வாழ்க்கை சக்கரமே சுழலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடாக செல்போன்களின் எண்ணிக்கை வந்துவிடும் என்ற நிலையை எட்டும் வகையில், தற்போது செல்போன்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 70 லட்சம் புதிய செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன. அரசு, வங்கி அனைத்து சேவைகளுக்கும் தகவல் அனுப்புவதற்கு இப்போது செல்போன்கள்தான் வழியாக இருக்கிறது. வெறுமனே பேசுவதற்கும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு  மட்டுமே  என்ற  நிலையைத்தாண்டி,  பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்பதில் தொடங்கி அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் பெறுவதற்கு வசதியான இன்டர்நெட் சேவையைப்பெறுவதற்கும் இப்போது செல்போன்களை பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை  உயர்ந்து கொண்டே போகிறது.

இது ஒருபுறம் இருக்க, செல்போன்  டவர்களாலும்,  அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதாலும், உடல்நலத்துக்கு கேடு ஏற்படுகிறது, இவை இரண்டிலும் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளால் புற்றுநோய் வருகிறது என்றும் அச்சமூட்டும் தகவல்கள் வருவதும் பயமாக இருக்கிறது. “செல்போன் டவர்களில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு அலைகள் மனிதனின் உடல்நலத்துக்கு மட்டுமல்ல, விலங்குகள், பறவைகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. செல்போன் டவர்கள் இருக்கும் இடங்களைச்சுற்றிலும் உள்ள பகுதிகளில் சிட்டுக்குருவிகளைப்பார்க்க முடிகிறதா?” என்ற கேள்விகளைக் கேட்டு, இதுதான் ஆதாரம் என்று கூறுபவர்களும் உண்டு. கேரள மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து புற்றுநோயால் காலமான ஜெ.எல்.குப்தா எழுதியுள்ள நூலில், ‘நான் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியதால் குறிப்பாக உச்ச நீதிமன்ற வக்கீலாக இருந்தபோது, கட்சிக்காரர்களிடம் நீண்டநேரம் செல்போனில் கலந்துரையாடல் செய்ததால்தான் என்னுடைய மூளையில் புற்றுநோய் கட்டி வந்தது’ என்று எழுதியிருப்பது பல அச்சம் கலந்த உணர்வுகளை கிளப்பிவிட்டுவிட்டது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யூ.யூ.லலித் ஆகியோர் கொண்ட பெஞ்சு, டெல்லி வசந்த்குஞ்ச் பகுதி குடியிருப்போர் தங்கள் பகுதியில் செல்போன் டவர்கள் அமைப்பதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில், மறைந்த கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எழுதிய நூலில் குறிப்பிட்ட தகவல்களை எடுத்துக்காட்டி, “இதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டு இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், “செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளால் உடல்நலத்துக்கு கேடு ஏற்படுகிறதா?, இந்த டவர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாசு ஏற்படுத்துபவை என்று வகைப்படுத்தலாமா?” என்று நீதிபதிகள் கேட்டு இருக்கிறார்கள்.

செல்போன்கள் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. சில ஆய்வுகள்  செல்போன்களில்  இருந்தும்  மின்காந்த  கதிர் வீச்சுகள் வெளிவருகின்றன என்று  கூறுகிறது.  இதற்கு  தீர்வுதான் என்ன?. வெளிநாடுகளில் என்ன தரம் பின்பற்றப்படுகிறது? என்று கேட்டு இருக்கிறார்கள். இது வெகு நாட்களாகவே மக்கள் மனதில் உள்ள ஒரு அச்சம் கலந்த குழப்பம். உடனடியாக மத்திய அரசாங்கம், விஞ்ஞானிகளின் துணையோடு செல்போன் டவர்களில் இருந்தும், செல்போன்களில் இருந்தும் மின்காந்த கதிர்வீச்சுகள் வெளிவருகின்றதா?, பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன எடுக்கலாம்? என்பதுபோன்ற ஆய்வுகளை நடத்தி, ஒரு தெளிவான அறிவிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். செல்போன் டவர்கள், செல்போன்களால் ஆபத்து என்பது வீண் பயமா?, ஆதாரம் இருக்கிறதா? என்ற தகவல் மக்களுக்கு தெரிந்தாகவேண்டும்.

No comments:

Post a Comment