Wednesday, April 20, 2016


2½  லட்சம்  தொழில்  அதிபர்கள் உருவாகப் போகிறார்கள் 16/04/2016

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று, டெல்லியில் பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போதும், மாநிலங்களில் முதல்-அமைச் சர்கள் கொடியேற்றி வைக்கும்போதும் உரை ஆற்று வார்கள். அப்போது அவர்கள் ஆற்றும் உரை, மக்களை பெரிதும் ஈர்க்கும்வகையில் இருக்கும். காரணம், அந்த உரைகளில் மக்களுக்கு பலன் அளிக்கும் பல அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையில், கடந்த ஆண்டு 69-வது சுதந்திரதினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ‘தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் வங்கிக்கிளைகளும் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் தொழில்முனைவோருக்கும், ஒரு பெண் தொழில் முனைவோருக்கும் புதிதாக தொழில் தொடங்கு வதற்காக கடன் உதவி அளிக்கவேண்டும் என்பதுதான், இந்த அறிவிப்பின் நோக்கமாகும். இந்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்படுமோ? என்று எல்லோரும் எதிர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் சரியான தினத்தில் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். மத்திய வேளாண்மை மந்திரியாக இருந்த நேரத்தில், பசுமைப்புரட்சி கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரின்போது ராணுவ மந்திரியாக இருந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக இருந்தவருமான ஜெகஜீவன்ராமின் பிறந்தநாளின்போது, இந்த ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த திட்டத் தின்படி, நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் வங்கிக்கிளைகள் ஒவ்வொன்றும் தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் மக்களில் ஒருவர், ஒரு பெண் தொழில் முனைவோர் ஆகிய 2 பேர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க எந்தவித ஜாமீனும் இல்லாமல், ஆளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை கடன் வழங்கவேண்டும் என்பதுதான், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் ஒரே ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் புதிய தொழில் முனைவோர் உருவாகப் போகி றார்கள். இவர்கள் அனைவரும் வேலை தேடுபவர்களாக இருந்த நிலைமாறி, இனி வேலை கொடுக்கப் போகிற வர்களாக மாறப் போகிறார்கள் என்று பிரதமர் கூறியது நூற்றுக்கு நூறு சரியாகும்.

நாட்டில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், பெண்கள், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கிறது. இந்த ‘எழுந்து நில் இந்தியா’ இந்தக்குறையை நிச்சயமாக போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் எண்ணிக்கை 85 லட்சம் அதாவது 13 சதவீதம் மட்டுமே. விவசாயம் அல்லாத நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் 9.5 சதவீதமும், மலைவாழ் மக்கள் 4.3 சதவீதமும் மட்டுமே இத்தகைய தொழில்களை நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களெல்லாம் ஏதாவது வேலைதேடிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற நிலையில், இந்த அறிவிப்பின் பலனை அவர்கள் அடைய வேண்டு மென்றால், எத்தகைய தொழில்களை அவர்கள் தொடங்கினால் லாபகரமாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அரசுத்துறைகள் வழிகாட்டவேண்டும். வங்கிகள்  நிதி உதவி தந்தாலும், எத்தகைய தொழில்களை, எந்த இடத்தில் அமைக்கலாம்? என்பதை அவர்களுக்கு தெரியவைத்தால்தான், அவர்களையும் ஒரு முடிவை எடுக்க அழைத்து செல்வதுபோல இருக்கும். 2 லட்சத்து 50 ஆயிரம் தொழில் முனைவோர் உருவாக்கப்படவேண்டும் என்றால், அவர்களுக்கு அந்தப்பாதையைக் காட்டினால் தான் அதை நோக்கி செல்லமுடியும் என்ற வகையில், மத்திய-மாநில அரசாங்கங்களின் தொழில் வழிகாட்டி மையங்கள் செயல்படவேண்டும். பிரதமரின் அறிவிப்பை ஒவ்வொரு வங்கிக்கிளையும் நிறைவேற்றுகிறதா? என்பதைக் கண்காணிக்கவேண்டும். இந்த அறிவிப்புக்கு ஒரு காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள் நிறைவேற்றி முடிக்கவேண்டும். மேலும், இது ஒரு தொடர் முயற்சியாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment