Thursday, April 21, 2016



நான்காவது காலாண்டு இறுதியில்
வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியிருக்கும்
 
அசோசெம் ஆய்வறிக்கையில் தகவல்
 (இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு)

புதுடெல்லி-21/04/2016

கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில், நான்காவது காலாண்டு (ஜனவரி - மார்ச்) இறுதியில் வங்கிகளின்  மொத்த  வாராக்கடன் மற்றும் மறுசீரமைத்த கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியிருக்கும் என தொழில்துறை அமைப்பான அசோசெம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மூன்றாவது காலாண்டில்...

சென்ற நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடியாக இருந்தது. நான்காவது காலாண்டில் அது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும் என அசோசெம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில்,  பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் அது ரூ.3.61 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதே காலத்தில் தனியார் வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.31,576 கோடியில் இருந்து ரூ.39,859 கோடியாக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது.

லாப வரம்பு

வாராக்கடன் அதிகரித்ததால் அனைத்து வங்கிகளின் லாபம் வரம்பு கடுமையாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பொதுத்துறையைச் சேர்ந்த 11 வங்கிகள் கடும் இடர்பாட்டை எதிர்கொண்டன. வாராக்கடன் மற்றும் அதற்கான ஒதுக்கீடு அதிகரிப்பால் அந்த வங்கிகளுக்கு ஒட்டுமொத்த அளவில் ரூ.12,867 கோடி இழப்பு ஏற்பட்டது.

அப்போது பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் உள்ளிட்ட சில முன்னணி வங்கிகளின் நிகர லாபம் கடுமையாக குறைந்திருந்தது. இதில் பாரத ஸ்டேட் வங்கி பெரும் சரிவை சந்தித்தது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இவ்வங்கி ரூ.1,115 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் இது 61 சதவீதம் குறைவாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி, 93 சதவீத சரிவுடன் ரூ.51 கோடி நிகர லாபம் ஈட்டியது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.775 கோடியாக இருந்தது.

வாராக்கடனாகும் அபாயம்

இந்த நிலையில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான பீ.என்.பி. பரிபாஸின் கணிப்புகள் கவலையளிக்கும் வித்தில் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி இந்திய வங்கிகள் வழங்கிய மொத்த கடனான 1,10,900 கோடி டாலரில் 16 சதவீதம் (17,800 கோடி டாலர்) வாராக்கடனாகும் அபாயம் உள்ளது. அடுத்து இந்தோனேஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் முறையே 7.2 மற்றும் 6.6 சதவீதம் வாராக்கடனாகும் ஆபத்து இருக்கிறது.

இந்தோனேஷிய வங்கிகளின் மொத்த கடனான 30,500 கோடி டாலரில் 2,200 கோடி டாலர் வாராக்கடன் அபாயத்தை சந்திக்க உள்ளது. சீன வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் 1,05,000 கோடி டாலர் வாராக்கடனாகும் நிலையில் உள்ளது என பீ.என்.பி. பரிபாஸ் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகளில், பங்குச்சந்தை பட்டியலில் உள்ள 738 வங்கிகள் வழங்கிய மொத்த கடன் 1.7 லட்சம் கோடி டாலராக உள்ளது. கொரியா நாட்டு வங்கிகளின் வாராக்கடன் 5.8 சதவீதத்தையும், தாய்லாந்து நாட்டு வங்கிகளின் வாராக்கடன் 2.4 சதவீதத்தையும் எட்டும் நிலையில் உள்ளன என பிரான்சு நாட்டின் பீ.என்.பி. பரிபாஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment