Wednesday, April 20, 2016


தேன்கூட்டில்  கையை  வைத்தால்! 21/04/2016

தேன்கூட்டில் கையை வைத்தால் அங்குள்ள தேனீக்கள் எல்லாம் மொத்தமாக ஒன்றுசேர்ந்து உடல்முழுவதும் கொட்டி, வேதனையால் துடிதுடிக்க வைத்துவிடும். அதுபோன்ற ஒரு நிலையைத்தான் மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு பட்ஜெட்டிலிருந்து தொடர்ந்து அனுபவித்துவருகிறது. தொழிலாளர்கள் பணிபுரியும் காலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். ஆனால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர பென்ஷன் கிடையாது. மாதந்தோறும் அவர்களுடைய சம்பளத்திலிருந்து அதிக பட்சமாக 12 சதவீதம் பிடிக்கப்படும். இதுபோல, அவர்களை வேலையில் அமர்த்தியிருக்கும் நிறுவனமும், தங்கள் கையிலிருந்து 12 சதவீதம் வழங்கும். இந்த 24 சதவீத தொகையும் தொழிலாளர் வைப்புநிதியில் சேர்க்கப்பட்டு, அதற்கு வட்டியும் வழங்கப்படுகிறது.<p></p>இந்த மொத்ததொகையை பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு ஊழியர்கள் மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம், அதற்கு வரிகிடையாது என்று இருந்தது. இடையில் அவசர தேவைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனியார் நிறுவனங்களில் பணி புரியும் 3 கோடியே 70 லட்சம் பேர் இந்த வைப்புநிதியில் உறுப்பினர்களாக இருந்தார்கள். பட்ஜெட் தாக்கல் செய்ததிலிருந்தே தொழிலாளர்களை பாதிக்கும் வகையில், வைப்புநிதியில் பல மாற்றங்களை மத்திய அரசாங்கம் கொண்டுவந்தது. ஒவ்வொரு அறிவிப்புக்கும் எதிர்ப்புகள் வந்தவுடன் உடனடியாக அதை வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தது.

இடையிலே வேலையைவிட்டு நின்றாலோ, அல்லது அவசரதேவைக்கோ இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கனவே இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசாங்கம் இந்த வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஓய்வுபெறும் வயதை 54-லிருந்து 58 ஆக உயர்த்தியது மட்டுமல்லாமல், இடையில் வேலையைவிட்டு நின்றாலோ, அல்லது அவசரதேவைக்கோ பணம் எடுப்பவர்கள் முழுத்தொகையையும் 58 வயதுக்கு முன்பு எடுக்கமுடியாது. இடையில் அப்படியே எடுக்கவேண்டுமென்றால், அவர்கள் கட்டிய தொகையைத்தான் எடுக்கமுடியுமே தவிர, வேலைக்கு அமர்த்தியவர்கள் வழங்கியதொகையை எடுக்கமுடியாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதை எதிர்த்து பெங்களூருவில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்களும், பெண்களும் பெங்களூரு நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்ணீர் புகைகுண்டுவீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு, தடியடி என்று பெரிய அமளியே ஏற்பட்டுவிட்டது. 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. சில வாகனங்கள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன. 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமும் அடைந்தனர். எங்கே இந்த போராட்டம் காட்டுத்தீபோல பரவி, நாடு முழுவதும் தொழிலாளர்களின் எதிர்ப்பு அலைகிளம்பிவிடுமோ? என்ற நிலையில் மத்திய அரசாங்கம் அப்படியே தனது முடிவை பின்வாங்கிக்கொண்டது.

வீடு கட்டுவது, மருத்துவசெலவு, குழந்தைகளின் தொழில்கல்வி செலவு, திருமணச்செலவு போன்ற செலவுகளுக்கு, பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பே முழுத்தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே எடுத்தமுடிவுகள் எல்லாம் வயதுமுதிர்ந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்புவேண்டும் என்பதற்காகத்தான் என்று காரணம் சொல்கிறார்கள். எந்த ஒரு தொழிலாளியும் தன் மாதசம்பளத்திலிருந்து சேமிக்கும் பணத்தையும், தன்னை வேலைக்கு அமர்த்தும் தொழில்நிறுவனங்கள் தனக்காக வழங்கும் தொகையையும் எப்போது எடுக்கவேண்டும்?, எப்படி செலவழிக்கவேண்டும்? என்று முடிவெடுப்பது அவரவர் சொந்த உரிமை. அதில் மத்திய அரசாங்கம் தலையிடக்கூடாது. சமூகபாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றால், அரசு சார்பில் எவ்வளவோ திட்டங்களை தீட்டலாம். இனிமேலும் இதுபோன்ற முடிவுகளை அறிவிக்கும் முன்பு, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துபேசி முடிவை அறிவிக்கவேண்டுமே தவிர, இப்படி முடிவுகளை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்துவிட்டு, உடனுக்குடன் வாபஸ்பெறும் நிலை ஏற்படக்கூடாது.

No comments:

Post a Comment